நமது நகரங்கள் தினமும் சீராக செயல்பட நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் போன்ற எந்த சூழலிலும் இடைவிடாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள், நேற்று நள்ளிரவு போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சூழலில், முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், தமிழக அரசு தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.
முதல்வர் வெளியிட்ட அறிக்கையில்,
“4 ஆண்டுகளில் தூய்மைப் பணியாளர்களுக்காக பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இப்போது அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து, கீழ்க்கண்ட புதிய நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.
புதிய 6 நலத்திட்டங்கள்
- தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கல்
- அவர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
- சுயதொழில் தொடங்க உதவி
- நல்வாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
- 30 ஆயிரம் வீடுகள் / குடியிருப்புகள் வழங்கல்
- பணியின்போது உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி
மேலும், பணியின்போது ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் தனித்திட்டமும் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
“இது என்றும் உங்களுடன், உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு” என முதல்வர் தனது பதிவில் வலியுறுத்தினார்.













