செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் அ.ப.ஹரிஹரன் வலியுறுத்தல்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் முறைகேடாக இயங்கி வரும் குவாரி குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்திய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமான குவாரி ஒன்று விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து உண்மைத் தன்மை அறியவும், செய்தி சேகரிக்கவும் நிருபர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் இருவரும் அங்கு சென்றுள்ளனர். அங்குள்ள முறைகேடுகளைப் படம்பிடிக்க முயன்றபோது, அங்கிருந்த மர்ம கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து உருட்டுக் கட்டைகள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் நிருபர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது.
தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த நிருபர் கதிரவனுக்கும், செபாஸ்டினுக்கும் உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சக ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஊடகத்தினர் மீதான இத்தகைய தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் மீது, பாரபட்சம் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டு உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும்
ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கும் செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அவர்களை பாதுகாக்கும் பொருட்டு அதற்கேற்ற சட்டங்களையும் இயற்ற வேண்டும் என தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.












